Skip to main content

“தரம் தாழ்ந்த மனநிலை”; அமீர் - ஞானவேல் பிரச்சனை குறித்து பொண்வண்ணன்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

ponvannan about ameer gnanavel raja paruthiveeran issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். 

 

இப்படி திரை பிரபலங்கள் ஒவ்வொருத்தராக இந்த விவகாரம் தொடர்பாக பேசி வரும் நிலையில், பருத்திவீரன் படத்தில் நடித்த பொண்வண்ணன், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பருத்தி வீரன் திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேலின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன். அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த  நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. 

 

அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்! பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்துக் கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான்  வேலை பார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்ப்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. 

 

இதனால் தான்,பணத்துக்காக தனது படைப்பிற்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்ல முடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும்  கிடைத்த தேசிய விருது அங்கீகாரங்களாலும் அது பெற்ற இடமோ உயரியது. படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .

 

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக ..திருடன், வேலைதெரியாதவர்.. என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத் திமிரும், வக்கிரமாக இருந்தது..! தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ! வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!

 

இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்