Skip to main content

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நிறைவு... முதல் பாகத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

Ponniyin Selvan

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

பின், இயல்புநிலை திரும்பியதையடுத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியது. மத்தியப் பிரதேச ஷெட்டியூல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சில முக்கிய காட்சிகளைப் படமாக்க படக்குழு ஊட்டி விரைந்தது. இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்றுவந்த இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. 

 

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ள படக்குழு, முதல் பாகம் 2022ஆம் ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்