“அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை”- ஜோதிகா பட இயக்குனர் விளக்கம்!

ponmagal vanthal

ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ. ப்ரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே இந்தப் படத்தில் மாதர் சங்கத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகசர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக இயக்குனரிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஜெ.ஜெ. ப்ரெட்ரிக் இதுகுறித்து விளக்கமளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்தத் திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

jothika ponmagal vanthaal
இதையும் படியுங்கள்
Subscribe