Skip to main content

"யுவன் சங்கர் ராஜாவால் எனது கனவு நனவாகியுள்ளது..." நடிகர் ரியோ நெகிழ்ச்சி!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

Plan Panni Pannanum

 

பாசிட்டிக் ப்ரிண்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், "பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்கு உங்கள் முழு ஆதரவையும் தந்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றினோம். எனது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது என்பது என்னுடைய கனவுகளில்  ஒன்று. அது இப்போது நனவாகியிருக்கிறது. கோவிட் தடங்கல்கள் எத்தனை வந்தாலும் அந்த இன்னல்களைத் தாண்டி இத்திரைப்படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இந்த பொதுமுடக்கம் நம் மீது பெரும் அழுத்தங்களையும், சோகங்களையும் தந்தது. அந்த கடினமான காலகட்டத்தை தாண்டி இப்போது அனைவரும் திரையரங்குகள் வந்து திரைப்படங்களைப் பார்த்து மகிழலாம்" எனக் கூறினார்.  

 

நடிகை ரம்யா நம்பீசன் பேசுகையில், "மீண்டும் திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துள்ளது எங்கள் குழுவில் அனைவருக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரையுலகில் இது அனைவருக்கும் கடினமான காலமாக இருந்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடி தளங்கள் சினிமாவுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தது. ஆனாலும் அனைவரும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளரும். இத்திரைப்படத்தை நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும்" எனக் கூறினார்.

 

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேசுகையில், "திரையுலகை சேர்ந்தவர்களும், ஊடக நண்பர்களும் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப்பெரிய துன்பங்களை கடந்து வந்தார்கள். அவையனைத்தையும் கடந்து இப்போது திரையரங்குகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளதும், எங்கள் படம் வெளியாவதும், அனைவருக்குமே மிக மகிழ்ச்சி. தயாரிப்பாளர்களின் துணிச்சலான முடிவுகளால் மட்டுமே இன்று இது சாத்தியமாகியுள்ளது. இப்படத்தில் ரியோ மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இன்னும் பல படங்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ரம்யா நம்பீசன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர். எளிதில் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்தப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். பால சரவணன் இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பார். பூர்ணிமா ரவி இளைய தலைமுறை ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார். 100 சதவீதம் காமெடி சரவெடியாக இத்திரைப்படம் இருக்கும். 2021 செப்டம்பர் 24 அனைவரும் இப்படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசையமைப்பாளர் தேர்வு என் விருப்பம் தான் - ‘ஜோ’ பட அனுபவம் பகிரும் ரியோ ராஜ்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Joe Movie Actor Rio Raj Interview

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர், பிறகு வெள்ளித்திரையில் நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ், சமீபத்தில் வெளியான ஜோ படத்தின் அனுபவம் பற்றி நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோ படக்குழு சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஒரே நேரத்தில் வந்தவர்கள். அந்த விதத்தில் அனைவரும் இணைந்து ஒரு வெற்றிப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரை நோக்கி வந்த போது எல்லோருக்கும் இருப்பது போல பல கஷ்டங்கள், சிக்கல்கள் அதெல்லாம் ஒரு வெற்றியைப் பார்த்த பிறகு சரியாகிடும். 

என் பார்ட்னர் கூட முதல் நாள் முதல் காட்சியின் போது என்னை திரையில் பார்த்ததும் ரொம்ப எமோஷனல் ஆனாங்க, அது படம் பார்த்து வந்த அழுகை இல்லை. அதற்கு பின்னால் இருந்த என்னுடைய ஒரு நீண்ட போராட்டம் இருக்கு, அதை நினைத்து அழுதாங்க, அந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போனால் ரிலாக்ஸா உணர வைக்கிற ஒரு இடமாக வீடு எல்லாருக்கும் அமைய வேண்டும். எனக்கு அப்படி ஒரு பார்ட்னர் அமைந்திருப்பது பாக்கியம் தான்.   

ஜோ படத்தின் கதை கேட்டு முடித்ததுமே சித்துகுமார் தான் இசையமைப்பாளராக இந்த படத்திற்கு இருக்க வேண்டும் என்பது நான் கேட்டுக்கொண்டது. குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே சித்துகுமாரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்தோடு மிகவும் திறமையானவருக்கு ஜோ படத்தின் மூலம் இந்த வெற்றி கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.  

Next Story

“ஜோ பட பாடல் இவர் எழுதப்போறாருன்னு சொன்னதும் நம்பவில்லை” - இசையமைப்பாளர் சித்துகுமார்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Joe Movie Music Director Siddhu Kumar Interview

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இசையமைப்பாளர் சித்து குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்கள் பின்வருமாறு..

ஜோ படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை முடிந்து பைனல் அவுட்புட் எடுக்கும் போது இரு ஒரு கம்போசராக எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப திருப்தியாக இருந்தது. திரையரங்கில் என்ன ரிசல்ட் வரும் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. பெரும் வெற்றியைக் கண்ட பிறகு இன்னும் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனதினை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். 

ராஞ்சனா, ரப்னே பனா ஜோடி போன்ற பாலிவுட் படங்களின் இசைக்கோர்வை எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும், அது நான் இசையமைக்கும் போது இன்ஸ்பிரேசனாகவும், ரொமாண்டிக் மூட் செட்டுக்கும் பயன்படும். சர்வதேச இசையமைப்பாளர்களின் இசை அதிகம் கேட்பேன், உறவுகள் தொடர்கதை பாடலை அடிக்கடி கேட்பேன், அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகவும் எப்போதுமே இருக்கிறது.

ஜோ படத்திற்கு இசையமைக்கும் போது படத்திற்கு அப்பாற்பட்டு போய்விடக்கூடாது, அது படத்துடனேயே பயணிக்க விரும்பியே வேலையை ஆரம்பித்தேன். உருகி பாடல் தான் முதலாவதாக ஆரம்பமானது அதற்கடுத்த பாடலுக்கான வரிகள் கூட நாயகன் ரியோ தான் எடுத்துக் கொடுத்தாரு, அவர் பாடல் எழுதப்போறேன்னு சொன்னதும் நம்பவில்லை, அப்புறம் அதை தவிர்க்கும்படியாக இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது.