சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை விஜய் ஆண்டனியே எழுதினார். அதனைத் தொடர்ந்து, இப்படத்தை ‘பாரம்’ படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என அறிவிக்கப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இயக்குநர் மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ப்ரியா கிருஷ்ணசாமிக்குப் பதிலாக ஆனந்த் கிருஷ்ணன் இப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்த் கிருஷ்ணன், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் இயக்குநர் ஆவார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.