வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையிலும், ஜெயில் படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது
இந்நிலையில் ஜெயில் படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ,படத்தின் விநியோக உரிமையை எங்களுக்கு தருவதாக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தற்போது அதனை மாற்றி சட்ட விரோதமாக எஸ்.எஸ். புரொடக்ஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.