Skip to main content

"சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்" - பேரரசு விளக்கம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

perarasu speech in aima movie event

 

அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில், யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஐமா'. சண்முகம் ராமசாமி தயாரித்துள்ள இப்படத்திற்கு இசை கே.ஆர். ராகுல். பாடல்கள் அருண் மணியன். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசுகையில், "சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளி வந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250லிருந்து 300 படங்கள் வெளிவராமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.

 

நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது. ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது. இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி  வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார். ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால், தெரியாது. இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், ''இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார். சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான். உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில்  நடிக்கக் கூடாது. அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன் 30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்துவிட்டார். இதை நாம் கவனிக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள  தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும். எவ்வளவோ படங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான். தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்துவிட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.

 

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்டபோது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள். இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை” - பேரரசு

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
perarasu about vijay in Ninaivellam Neeyada Audio Launch

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம்  ‘நினைவெல்லாம் நீயடா’. ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பிரஜின் கதாநாயகனாக நடிக்க, மனீஷா யாதவ் ஹீரோயினாக நடிக்கிறார். ‘அப்பா’  படம் மூலம் கவனம் ஈர்த்த யுவலட்சுமி இளம் நாயகியாக அறிமுகமாகிறார். சினாமிகா இன்னொரு நாயகியாக அறிமுகமாகிறார். இளம் நாயகனாக ரோஹித் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மனோபாலா, மதுமிதா, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், முத்துராமன், பி.எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கே.ஆர், கே.ராஜன், பி.எல்.தேனப்பன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், நடிகைகள் கோமல் ஷர்மா, மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இயக்குநர் பேரரசு பேசுகையில், “இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும். இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு 'பன்னீர் புஷ்பங்கள்' படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. 

இளையராஜாவின் 1417வது படம் இது. இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம். ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது. காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார். 

Next Story

“ஆடியோ விழாவில் பங்கேற்ற பிறகுதான் முழு சம்பளம் கொடுக்கணும்” - பேரரசு யோசனை

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
perarasu latest speech

'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுரளி பாலு இசையமைத்திருக்கும் இப்படம் 2கே கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேரரசு பேசுகையில், ''இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள், நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்து வைத்துக் கொண்டு, இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும். இதனை ஒரு ஆலோசனையாக முன் வைக்கிறேன்.

இப்படத்தின் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநரை, இயக்குநர் சங்கத்திற்கு வரவழைத்து பேசினோம். அவர் சிக்லெட்ஸ் படத்தின் கதையை விவரித்தார். உடனே இதுபோன்ற படத்தின் விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்து இங்கு வருகை தந்திருக்கிறேன். இந்தப் படத்தில் பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படத்தை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் தங்களது பிள்ளைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டு, ஏமாளிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது.

இன்றைக்கு விவாகரத்து அதிகரித்துவிட்டது. அதற்காக பெற்றோர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. இன்று ஒரே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் பல ஆண்டுகளாக கணவன் - மனைவி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காகத் தான் ஒரே வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய இளம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அப்பா அம்மா என்பது ஒரு பிராப்பர்ட்டி ஆகிவிட்டது. இதுபோன்ற சூழலில் 'சிக்லெட்ஸ்' போன்ற படங்கள் வெளிவருவது அவசியம்'' என்றார்.