கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் அளித்துள்ளனர். ஆசிரியரின் இந்த செயலுக்கு இயக்குநர் பேரரசு சமூகவலைதளத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில்...
"ஆசிரியர்களை குருவாக மதித்துதான் தன் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அவர்களிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை கடுமையாக தண்டிப்பதுடன் மட்டுமல்ல,
அதன் பிறகு அவர்கள் வேறெங்கும் ஆசிரியர் பணி தொடர முடியாதவாறு தண்டனை இருக்க வேண்டும்!
பணியிடை நீக்கம், தற்காலிக நீக்கம் இதெல்லாம் தண்டனையே இல்லை! இதனால் யாரும் திருந்தப் போவதில்லை! மற்றவர்கள் பயப்படப் போவதுமில்லை!" என பதிவிட்டுள்ளார்.