Advertisment

"ஆசிரியரை விட்டுவிட்டு மதுவந்தி மீதான பாய்ச்சலே அதிகமாக இருக்கிறது" - பேரரசு

fsdhsfhdfhdfs

Advertisment

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.

ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்குப் பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது. இது சம்பந்தமாக நிறைய பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப் பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

ஆனால், அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர். மதுவந்தி! மதுவந்தி, மதுவந்தியைத் தூக்கி உள்ளே போடு! என்று அவர் மீதான பாய்ச்சலே அதிகமாக இருக்கிறது. அவரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின் குரல், தந்தையின் குரல், அண்ணனின் குரல்... இப்படி அக்கறையோடு, சமூக அக்கறையோடு குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம். உங்களின் அரசியல் பழிவாங்கலுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சினை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால், சட்டப்படி தண்டிக்கட்டும். இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மைக் குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவு தாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம்!" எனக் கூறியுள்ளார்.

directorperarasu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe