ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் ஆந்திர துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘ஹரி ஹர வீர மல்லு’. என்.எம்.ரத்னம் தயாரித்துள்ள இப்படத்தில் நிதி அகர்வால், அனுபம் கெர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள படம் ஏற்கனவே பல முறை ரிலீஸுக்கு திட்டமிட்டு தள்ளிபோய் கொண்டே இருந்தது.
பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் இப்படம் ஒருவழியாக இன்று தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. துணை முதல்வர் ஆன பிறகு முதல் படமாக இந்தப் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் கொண்டாடி வரவேற்றனர்.
அந்த வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில் படத்திற்கு பேனர் வைத்து வெடி வெடித்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வளாகத்திற்குள் வந்த கன்னட அமைப்பினர் போஸ்டரில் கன்னட மொழி ஏன் குறிப்பிடவில்லை எனக் கூறி போஸ்டரை கிழித்தனர். மேலும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது. இதனிடையே படம் மோசமான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் சந்தித்து வருகிறது.