Skip to main content

இதனால் தான் நான் 'இளையராஜா 75' நிகழ்ச்சியிலும், சங்கத்திலுருந்தும் வெளியேறினேன் - மனம் திறந்த பார்த்திபன் 

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
parthiban

 

'இளையராஜா 75' நிகழ்ச்சியின் முதுகெலும்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் தனது தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் இயக்குநர் பார்த்திபன். அத்தோடு நில்லாமல் ராஜாவின் இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார். பார்த்திபனின் செயலில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட விஷால் அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும் அவரது இருட்டடிப்பில் இருந்த உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வராமல் இருந்த நிலையில் தனது தரப்பு குறித்து விரிவான செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் பார்த்திபன்.

 

"நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். 'பலூன் பறக்க காற்று எப்படி காரணமோ அதை போல தான் தமிழர்களுக்கு இளையராஜா இசையும்’ என்று நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி வைத்து இருந்தேன். ஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியானது. நிகழ்ச்சி நடந்த அன்று காலை வரை நிகழ்ச்சி தொகுப்பாளரை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார். நான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம், நானே சொல்லிவிட்டேன்’ என திடீர் என்று கூறினார். நந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன். அவர் மழுப்பினார். இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

 

 

அந்த நிகழ்ச்சியில் மேடை ஒருங்கிணைப்பு ஏனோ தானோ என்று இருந்தது. இளையராஜாவை மேடையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாகக் கூறிவிட்டேன். டிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக மற்ற இசை அமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் பாடலை இசைக்க திட்டமிட்டேன். இந்த இரண்டையுமே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை மட்டுமே செய்தார்கள். விஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் வி‌ஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அதை சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.

 

இப்படி மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன். இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவிடம் 3ந்தேதி நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கும்போது என் பெயரை சொல்லும்போது ரமணா அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்போது அந்த சந்திப்பில் விஷாலும் உடன் இருந்து இருக்கிறார். இதை கேள்விப்பட்ட உடனே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன். இப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா வி‌ஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன். விஷாலை நான் ஆதரிப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விஷால் நந்தாவையும், ரமணாவையும் முழுமையாக நம்புவது தவறு இல்லை. ஆனால் விஷாலை போல எல்லோரையும் அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி சார்ந்த சாடல் அல்ல” - மன்னிப்பு கேட்ட பார்த்திபன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

parthiban about cyclone michaung chennai flood

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதனிடையே திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகிறார்கள். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அழித்து வருகின்றனர். இந்த நிலையில் பார்த்திபன் பாதிக்கப்பட்டோரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்பு இந்த மழை பாதிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை. தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?)

 

நாடாகவும், இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் லேக் வியூவ் அப்பார்ட்மெண்ட்ஸ்-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? அதிவேக புல்லட் ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள், வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க, வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! 

 

ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும், குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு? ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. நானோ, கேபிஒய் பாலாவோ, அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது. சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென. அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். 

 

(நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல. பொருளாதாரம் சார்ந்த அரசியலை. அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை. எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்” என வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மற்றொரு பதிவில், “தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ, ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல. சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற…இனியொரு விதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Next Story

''போட்டது மைக்... ஆனால் உடைஞ்சது என்னவோ...''- பார்த்திபன் உருக்கம்!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

'' Put Mike ... but what's broken is my mind '' - Parthiban melts!

 

அண்மையில் 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே மேடையில் இந்த நிகழ்வுக்காக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

 

actor

 

அந்த வீடியோவில் பேசிய பார்த்திபன், ''என் பிரியமானவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம். 'மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் இவ்வளவு அகங்காரம் தேவையா?' இதுபோன்று இன்று யூடியூப்பில் வைரலாக பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. தூக்கிப் போட்டது மைக் ஆனால் உடைந்தது என்னமோ என்னோட மனசு. நேற்றிலிருந்து அது சம்பந்தமான குழப்பம். அது சரியா தவறா? என்ன நடந்துகொண்டோம்... இது நடிப்பா? இல்ல வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்படா? என்ற பேச்சு போகிறது. ஆனால் அது மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. வெறும் ஒரு சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது மட்டுமில்லாமல் மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன் என்றவுடன் பரபரப்பாகிவிட்டது. என்ன நடந்தது தெரியல எனக்குள்ள ஏகப்பட்ட டென்ஷன். அங்கு நடந்த விஷயத்திற்காக நான் உடனே ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு மன்னிப்பு கேட்டு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தேன். ரோபோ சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனென்றால் இது எனக்குள் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. சில தவறுகள் நடக்கும் பொழுது பின்னோக்கி சென்று கரெக்ட் பண்ண முடியாது. நீங்களெல்லாம் பார்த்திருப்பீங்க நானே ஒரு சின்ன பையன் மாதிரி இறங்கி எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கும்போது அந்த கோபம் எழுவது நியாயமானது. இருந்தாலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. அந்த தவறுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.