Skip to main content

“மனம் சட்டென சங்கடம் கொண்டது...” - பார்த்திபன் உருக்கம்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
parthiban about vijay political entry

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசுகையில், “விஜய்யின் கட்சிக்கு பின்புறமுள்ள, பின்புலமாய் உள்ள அர்ப்பணிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. 100 கோடிக்கும் மேல் சன்மானம் பெறும் விஜய், 100 கோடிக்கும் மேல் சனத்தொகை கொண்ட இந்திய அரசியலில், தமிழக அரசியல் என்பது முதலில் நாளைய இந்தியாவை வெல்வதாக இருக்க வேண்டும். தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன் வருவது பாராட்டுக்குரியது. எஸ்.எஸ் போட்டியிலிருந்து விலகி சிஎம் போட்டிக்குள் நுழையும் ஆக்‌ஷன் அதிரடியாகவும் உள்ளது. 

மகாஸ்ரீ மகாராஜா ஒருவர் முற்றும் துறந்து முனிவராவது போல நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நவரத்ன கிரீடத்தைக் கழற்றி வைக்கப் போகிறார் என்பதை கண்டு மனம் சட்டென சங்கடம் கொண்டது. ஒரு சினிமா ரசிகனாக விஜய் விரும்பியாக, வேண்டுமா இவ்ளோ தியாகம். இவ்வாறு பலவாறு கேள்விகள். அரசியல் ஒரு சூரசம்ஹார சூட்சமிகு சூட்சமம் என்பர். அதன் ஆழமறிந்தவர்களும், அளக்க தெரியாதவர்களும். ‘சென்றவனை கேட்டால் வந்துவிடு என்பான்; வந்தவனை கேட்டால் சென்றுவிடு என்பான்.’ இந்நேரம் கண்ணதாசன் காதோரம் கிசுகிசுக்கிறார். அடிக்க வந்த ஆயிரம் விமர்சனங்களை வெட்டி வீழ்த்தி தமிழகத்தின் வெற்றி கண்டவர். களம் காணும் கழகத்தில் நான் செய்யும் கழகம் என்பது அதிர்ந்து பேசா, அமைதியே தனது அடையாளமான அன்பர் விஜய் எப்படி ஜெயிப்பார்” எனப் பலவற்றைப் பேசினார்.   

சார்ந்த செய்திகள்