Advertisment

“யாரையும் தாக்கியோ தூக்கியோ பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை”  - பார்த்திபன்

193

தனுஷ் இயக்கி அவரே நடித்துள்ள புதுப் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் மற்றும் அர்ஜூன் ரெட்டி பட நடிகை ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி வெளியிடுகிறார். 

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தனுஷ், பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் மேடையில் பேசிய பார்த்திபன் படம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசினார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவரது ஸ்டைலில் பதிலளித்தார். அந்த வகையில் அரசியல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால் ‘நான் தான் சிஎம் 26ஆன் வேர்ட்ஸ்’(இது அவருடைய புதுப் படத் தலைப்பு)” என்றார். இந்த பேச்சு தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை பார்த்திபன் தாக்கி பேசியதாக செய்தி வெளியாகின. 

இந்த நிலையில் அந்த செய்தி குறித்து பார்த்திபன் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சாதனை புரிவதை விட,  சாதாரன வார்த்தைகளை புரிய வைப்பது சிரமமாக உள்ளது. ‘மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டிக்கு விஜயம் புரிகிறார்’ என்றால் வருகை புரிகிறார் என்று பொருள். அந்த யூனிவர்சிட்டிக்கு யார் வேண்டுமானாலும் புரியலாம் வருகை ஆனால் பெரியார் படத்தை திறப்பதே உவகை! அரசியலுக்குள் யார் வேண்டுமானாலும் புரியலாம் வருகை(விஜயம்) ஆனால் வெற்றி (ஜெயம்) பெறுவது என்பது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. இதைவிட நடுநிலையான,பொதுவான, ஆக்சுவலி மொக்கையான கருத்து வேறிருக்க முடியாது என்பதனை வேரறுத்து என்னால் சொல்ல முடியும். 

யாரையும் தாக்கியோ தூக்கியோ பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி செய்வதானால் நெஞ்சை நிமிர்த்தியபடி நேரடியாகவே அரசியலுக்கு வந்து விடுவேன். எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக திமுக எனக்கு நெருக்கம் காரணம் கலைஞர் அவர்கள். அவர்கள் காலத்தில் தான் நான் ஒரு கலைஞனாக கௌரவிக்கப் பட்டேன். நண்பர் ஒருவர் ‘என்னங்க தொடர்ந்து அவரையே சப்போர்ட் பண்றீங்கப் போல’ என்றார். ‘ஏனப்படி கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘விஜயம் என்றால் வெற்றி தானே?’ என்றார். கடுப்பாகி ‘போய் டிக்‌ஷனரியை பாருங்கள்’என்றேன். தமிழுக்கே தமிழ் சப்டைட்டில் தேவைபடுகிறது. வீரனுக்கு அழகு போட்டியில் வெல்வது. ஒத்தையா ஓடி ஒன்னாம் பரிசு வாங்குவதல்ல. மல்யுத்த போட்டியில் கூட இரு போட்டியாளர்களையும் மக்கள் வரவேற்பாளர்கள். வெற்றி திறமையில் உள்ளது. இப்போதைக்கு நான் இட்லி பானை சின்னத்தில் நிற்கும் நண்பர் தனுஷ் அவர்களுக்கு பெருகும் ஆதரவில் பங்கு பெற்று மகிழ்கிறேன்.விரைவில் என் படம் துவங்க ஆயுத்தமாகிறேன்.வேறு எந்த அஜெண்டாவும் அர்ஜெண்ட் இல்லை என்வசம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment
Idli Kadai actor vijay ACTOR PARTHIBAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe