சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வந்தார். இப்படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வர அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஜனவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுத்து வருவதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்படம் சகோதரர்களின் கதை என சுதா கொங்கரா ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, சிதம்பரம் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இடையில் படப்பிடிப்பு சிக்கலில் இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு காரணமாகப் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் மோசடி விவாகரத்தில் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இன்னும் 40 நாள் தான் படப்பிடிப்பு இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் மதராஸி பட படப்பிடிப்பில் இருப்பதால் அதை முடித்துவிட்டு வருவாரென்றும் சுதா கொங்கரா பேசியிருந்தார். 

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளதாகவும் இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மதராஸீ படப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் படக்குழு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படத்தை ஏ.அர்.முருகதாஸ் இயக்கி வர ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.