நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலித் இலக்கிய கூடுகை நிகழ்வு இன்று மதுரையில் நடைபெற்றது. தலித் இலக்கியங்களுக்கு பங்களித்த எழுத்தாளர்கள், கலை ஆளுமைகள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
விழாவில் வரவேற்புரை வழங்கிய இயக்குநர் பா.ரஞ்சித், இளமைக்காலத்தில் தான் சந்தித்த புறக்கணிப்பு குறித்தும் தலித் இலக்கியங்கள் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் விரிவாகப் பேசினார். தன்னுடைய பேச்சின் இறுதியில், "இங்கு வந்திருக்கும் அனைவருமே என்னை செதுக்கிய ஆசான்கள். எங்களை செதுக்கிக்கொண்டிருக்கும் ஆசான்கள். நீங்கள்தான் எங்கள் வேர்ச்சொல். உங்களிடம் இருந்துதான் எங்களுடைய சந்தோசம், துக்கம், கொண்டாட்டம் என அனைத்தும் ஆரம்பிக்கிறது. மிகப்பெரிய பதிவை எங்களுக்கு நீங்கள் உருவாக்கி கொடுத்துள்ளீர்கள். நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை, என்னுடைய எழுத்து, உலகம், சினிமா இல்லை. நான் ஒரு ஆளாக இருக்கிறேன் என்றால் உங்களுக்குத்தான் பெரிய நன்றி சொல்வேன்" எனத் தெரிவித்த பா.ரஞ்சித் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்லும்போது கண் கலங்கினார்.