இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஓரிரு தினம் முன் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. மேலும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி தர மறுத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தார்கள். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறினார்கள். பின்பு கண்ணீருடனும் வேதனையுடனும் கங்கைக் கரைக்கு வந்தார்கள். ஆனால் அவர்களை உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். பிறகு பிரிஜ் பூஷண் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு விதித்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே பரபரப்பாக்கியுள்ள நிலையில் பலரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிஷோர், நடிகை ரித்திகா சிங் உள்ளிட்டோர் ஆதரவாக பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆதரவு தெரிவித்துள்ளனர். கலையரசன் பதிவில், "எங்களை பெருமைப்படுத்திய எங்கள் வீரர்கள் நீதிக்காக போராடுகின்றனர். அவர்கள் எந்த ஒரு கண்ணியமும் மரியாதையும் இல்லாமல் நடத்தப்படுகின்றனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் நிற்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
பா. ரஞ்சித் வெளியிட்ட பதிவில், "அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கியதற்கு கண்டனம். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றிய சாம்பியன்கள் எந்த விதமான கண்ணியமும் மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளனர். வெற்றியாளர்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் மூழ்கடிக்கும் போராட்டத்திற்கோ அல்லது அவர்களின் முடிவுக்கோ அரசு பதிலளிக்காதது வெட்கக் கேடானது. பிரிஜ் பூஷண் சிங்கை பதவியில் இருந்து உடனடியாக நீக்கவும், அவருக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் நான் கோருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.