
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித், தற்போது விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில், 'காலேஜ் ரோட்' பட ப்ரிவியூ ஷோவில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது தங்கலான் படத்தைப் பற்றி பேசிய அவர், "தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் முடிந்து விடும். நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்" என்றார்.
அவரிடம் ரஜினியுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா? எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், "ரஜினியுடன் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவரிடம் இன்னும் பேசவில்லை." என்றார்.