Skip to main content

''இந்த மாதிரி நேரத்தில் கூட இப்படிச் செய்கிறீர்களே..!'' - பா.இரஞ்சித் வேதனை!

Published on 09/05/2020 | Edited on 11/05/2020

 

bkb

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில் திரையுலகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தளப் பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கரோனா கொடூரத்தின் மத்தியிலும் தலித்துகள் மேல் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...


''உலகெங்கிலும் கரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களைப் பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தைத் தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய்ப் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளைத் தாங்கி நாம் அனைவருமே கரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தைப் போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழப் பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

 

இந்த கரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களைச் சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள். ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. இந்த கரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிகத் தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம்  டி. கோணாகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.அம்சவள்ளியைச் சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தைக் காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
 

தமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு மாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாகப் பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம். திராவிடம், தமிழ்த்தேசியம், கம்யூனிசம் என்று கருத்தியல் தளத்தில் பல தலைவர்களும், பல துணை அமைப்புகளும் சாதிக்கெதிராக இருக்கிற போதும், உழைக்கும் வர்க்க விளிம்புநிலை மக்களாக இருக்கக் கூடிய தலித் மக்கள் மேல் இந்த கரோனா காலத்திலும் தொடுக்கப்படும் சாதிவெறி வன்முறைகள் ஏன் ஏற்படுகிறது? என்பதையும், சாதி ஒழிப்பு தளத்தில் நாம் எத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் சுயப் பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

 

கரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. இதனை நாம் அறிந்து ஒப்புக்கொள்ளவேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாற்பத்தி நான்கு தனித்தொகுதி சட்டமன்றத் தொகுதியில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்த தனித்தொகுதி வேட்பாளர்கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு இம்மாதிரியான பாதிப்புகள் நடைபெறும்போது கூட இம்மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமில்லை, பேசுவதுமில்லை என்பதே வேதனை.

 

இந்தத் தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களைத் திறந்து இந்த கரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது? என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும். இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு நாம் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள். உலகமே துவண்டு கிடக்கக் கூடிய இப்படியான நெருக்கடி காலத்திலும் கூட, அன்றாடம் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிற ஒவ்வொரு தலித்துக்கும் பின்னால் இருக்கிற வலியையும், வேதனையையும் இப்போதாவது நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 

கடக்க முடியாத பொழுதுகளுடன்,

 

பா.இரஞ்சித்
திரைப்பட இயக்குனர்.
நீலம் பண்பாட்டு மையம்''

 

எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ப்ளூ ஸ்டார் படத்திற்கு இது தேவைப்படவில்லை” - ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Blue Star Cinematographer Tamil Azhagan Interview | 

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். சினிமாவில் தன்னுடைய பயணம் குறித்தும் ப்ளூ ஸ்டார் படம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் குறிப்பாக ஒளிப்பதிவை பாராட்டி நிறைய பேர் போன் பண்ணி வாழ்த்தினார்கள். இதெல்லாம் ரொம்ப நுணுக்கமாக செய்த விசயங்கள் என்று படத்தில் நான் நினைத்த பல விசயங்களை கவனித்து நிறைய பேர் சொன்னது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. கதைக்களம் அரக்கோணம் என்பதால் அங்கே என்ன இருக்கிறதோ, கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் படத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் நேட்டிவிட்டியோடு இருக்கும் என்பதால் அரக்கோணத்திற்கு அதிக வெயில், ரயில்வே ஸ்டேசன் இதுதான் ஸ்பெசல். அதையே படம் முழுவதும் பயன்படுத்தினோம்.  

எங்க ஃப்ரேம் வைத்தாலும் இது அரக்கோணம் என்று தெரியவேண்டும். அதில் ரொம்ப கவனமாகவே இருந்தோம். அதற்கு வெயில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மேக்கப் போட்டோம். பிறகு வெயிலுக்கு அவர்களெல்லாம் மேட்ச் ஆகிட்டாங்க, பில்டப் கொடுக்க, சில எமோஷ்னல்ஸ் கன்வே பண்ண ஸ்லோமோசன் சீன்கள் தேவைப்படும், அதை எடுத்து வைத்துக்கொள்வோம், தேவைப்பட்டால் பயன்படுத்துவோம், இந்த படத்தில் அது தேவைப்படவே இல்லை. 

கதையை முதலில் படித்தபோது கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையில் காதல் சார்ந்த போர்ஷன் ரொம்ப சூப்பரா இருந்தது. அதையே ஒரு தனிப்படமாக எடுக்கலாம் அந்த அளவிற்கு அழகான காதல் கதையும் உள்ளது. படத்திற்குள் சேராத ரஞ்சித் - ஆனந்தி ஜோடி நிஜ வாழ்க்கையில் அசோக்செல்வன் - கீர்த்தி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அது ரொம்ப ஆச்சரியமாகவும் இருந்தது. இயக்குநரும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் அண்ணா உதவி இயக்குநராக சென்னை:28 படத்துல வேலை பார்க்கும் போது அவரை பைக்ல பிக் அப் டிராப் பண்றது ப்ளூ ஸ்டார் இயக்குநர் ஜெய்குமார். இன்று ரஞ்சித் அண்ணா தயாரிக்க, ஜெய்குமார் படம் பண்ணது ரொம்ப சூப்பரான அழகான விசயமாக நான் பார்க்கிறேன்.

Next Story

4 பெண் இயக்குநர்களின் ஆந்தாலஜி; இயக்குநர் பா. ரஞ்சித் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 4 An Anthology of Women Directors; Director pa Ranjith First Look Released

 

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பா. ரஞ்சித். திரைப்படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாகத் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நான்கு பெண்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

பெண்களின் மாறுபட்ட கதைகளைக் கொண்டாட, நான்கு பெண் இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி படத்திற்கு ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  இதன் இயக்குநர்களாக அபிஷா, சினேகா பெல்சின், கனிஷ்கா, சிவரஞ்சனி ஆகியோர் உள்ளனர். மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.