oviya

இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு, நடிகை ஓவியா, 90 எம்.எல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர், அப்படத்தில் நடித்த நடிகைகள் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அனிதா உதூப் அழகிய அசூரா என்னும் பெயரில் ஓவியாவை வைத்து இயக்கிய படம்தான் 90எம்.எல், கடந்த ஒன்றாம் தேதி வெளியான இந்த படத்திற்கு முன்னமே தணிக்கையில் ஏ சான்றிதழ் தரப்பட்டது. இப்படத்தில் பல இரட்டை அர்த்த வசனங்களும், கவர்ச்சியான காட்சிகளும் இருப்பதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதேபோல் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் பல அமைப்பினர்களிடம் இருந்து கிளம்பியுள்ளன.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஆரிபா ரசாக், “பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை சீரழிக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளனர். கலாச்சார சீரழிவுக்கு காரணமான 90 எம்.எல் திரைப்படத்தை உடனே தடைசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மற்றும் இயக்குநர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்து திரையிட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.