கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூன் 31ஆம் தேதி வெளியான படம் தெலுங்கு படம் ‘கிங்டம்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியது. 

Advertisment

இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தில் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து படம் திரையிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்தார். மேலும் அப்படி திரையிட நிறுத்த தவறும்பட்சத்தில், திரையரங்குகளை முற்றுகையிட்டு, படத்தைத் தடுத்து நிறுத்துவோமெனவும் எச்சரித்திருந்தார். அதன் படி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் ராமநாதபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையரங்க வளாகத்தில் இருந்த கிங்டம் பட பேனரை கிழித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Advertisment

இதனிடையே படம் திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் கோவையில் நாம் தமிழர் கட்சியினர், ஒரு வணிக வளாகத்திற்குள் புகுந்து படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது படத்தை தடை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை காவல் துறையினர் அழைத்து சென்று கைது சென்றனர். அழைத்து சென்ற போது லேசாக காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு லேசாகத் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment