தெலுங்கு மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வந்த நிதி அகர்வால், கடந்த சில ஆண்டுகளாக லைம் லைட்டில் இல்லாமல் இருந்தார். 2022க்கு பிறகு அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் கடந்த மாதம் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஹரி ஹர வீரமல்லு’ படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். இப்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘தி ராஜாசாப்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நிதி அகர்வால் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு தனியார் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அப்போது அவர் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள காரில் வந்திருந்தார். இதனால் ஒரு நடிகைக்கு எப்படி அரசு வாகனம் ஒதுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் விமர்சனங்களுக்கு விளக்கமளித்து நிதி அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வாகனத்துக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது சில காரணங்களுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறியாமல் சில் ஆன்லைன் அறிக்கைகள் அரசு அதிகாரிகள் எனக்கு வாகனம் வழங்கியதாக கூறுகின்றன. அது முற்றிலும் ஆதாரமற்றவை.உண்மைக்கு புறம்பானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.