Skip to main content

அடுத்த சிக்கல்; தொடர் சர்ச்சையில் ‘லியோ’

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Next problem 'Leo' in serial controversy

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சைகளில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதே வேளையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இப்படி தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் படக்குழுவுக்கு மேலும் ஒரு சிக்கலாக, படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான்...' பாடலில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றிய 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு ஊதியம் வந்துசேரவில்லை எனக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். அதில் மூன்று மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் தராமல் இருந்ததாகவும் இது பற்றி தயாரிப்பு தரப்பிடம் கேட்டபோது, சரியாகப் பதிலளிக்கவில்லை எனவும் புகார் கொடுத்த கலைஞர்கள் தெரிவித்திருந்தனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஃபெப்சி தலைவர் செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து லியோ படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டதால், சென்சார் செய்யப்படவில்லை. அதே சமயம் திரையரங்குகளிலும் சென்சார் செய்யப்படாத டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் திரையிடப்பட்டது. ஆனால் சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் வெளியிடக்கூடாது என்ற விதி அமலில் உள்ளது. இந்நிலையில், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை திரையரங்குகள் எவ்வாறு வெளியிடலாம் என விளக்கம் கேட்டு மத்திய தணிக்கை வாரியம், சென்சார் செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தணிக்கை சான்றிதழ் இல்லாமல் டிரெய்லர் திரையிடப்பட்டது கிரிமினல் குற்றம் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்