கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன.
மறு உத்தரவு வரும் வரை தியேட்டர்களை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரிலீசுக்கு தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக மீண்டும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த ஊரடங்கு சமயத்தில் சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. நிதி நெருக்கடி காரணமாக சினிமா தயாரிப்பாளர்கள் ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, திரிஷா வின் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.