தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார், ‘பி ஆர் கே புரொடைக்‌ஷன்ஸ்’(PRK Productions)  எனும் பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். 

Advertisment

சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி, பெப்சி  சங்கத்தின் செயலாளர் சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் குமார், நடிகர் யோகிபாபு, இயக்குநர் சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குநர் இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். 

முனியாண்டி விலாஸ் உணவகங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான பாண்டியராஜின்மகன் தான் ராஜ்குமார். பள்ளி வயது முதலே தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற கனவில் இயங்கி வந்த ராஜ்குமார், தான் பத்தாவது படிக்கும் பொது,  ‘பி ஆர் கே புரொடைக்‌ஷன்ஸ்’ எனும் பெயரை உருவாக்கி வைத்துள்ளார். அதை நோக்கிய கனவில், இன்ஞ்சினியரிங் படிப்பிற்குப் பிறகு, தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில், தியாகராஜனின் ஆசியுடன், தயாரிப்பு மேற்பார்வையாளராக 15 வருடம் பணியாற்றியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.