இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. அங்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் கடந்த 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வெற்றிமாறன், அட்லீ உள்ளிட்ட திரை பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் நயன்தாரா இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இந்த குழப்பமான உலகில், உண்மையிலேயே வாழ்க்கை என்பது என்னவென்று உணர விரும்பினால் உங்கள் குழந்தைகளை மலைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள், அவர்களுடன் மலை ஏறுங்கள், அல்லது நீங்கள் சோர்வடையும் வரை ஒரு குளத்தின் அருகே குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
இது எதுவும் இல்லை என்றால் குழந்தைகளை ராம் இயக்கிய பறந்து போ படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதைப் பார்த்து நாம் அனைவரும் உண்மையில் எதை இழக்கிறோம் என்பதை பாருங்கள். இந்த படம் வாழ்க்கையில் முக்கியமாவை எவை என்பதை அழகாக நினைவூட்டியது. நான் பார்த்த அழகான படங்களில் இதுவும் ஒன்று” என்று இயக்குநர் ராம், கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.