Skip to main content

“உங்களால் மட்டுமே சிறப்பாக நடிக்க முடியும்” - ஜான்வி கபூரை பாராட்டிய நயன்தாரா

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

nayanthara praise jhanvi kapoor

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் கோலமாவு கோகிலா.  ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண், குடும்பச் சூழலினால் கொக்கைன் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் ஈடுபடுகிறார். பின்னர் அதிலிருந்து அவர் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை காமெடி கலந்து சுவாரசியமாகச் சொல்லியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படம் தற்போது 'குட் லக் ஜெர்ரி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. நயன்தாரா கதாபாத்திரத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியானது. 

 

ad

 

இந்நிலையில் 'குட் லக் ஜெர்ரி' படத்தின் ட்ரைலரை பார்த்து நயன்தாரா பாராட்டியதாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “'குட் லக் ஜெர்ரி' படத்தின் ட்ரைலரை பார்த்து நடிகை நயன்தாரா வெகுவாக பாராட்டியதாக கேள்விப்பட்டேன். அதன் பிறகு அவரின் தொலைப்பேசி எண்ணை வாங்கி நீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று மெசேஜ் அனுப்பினேன். இதற்கு, “கோகிலா எனது மனதிற்கு நெருக்கமான படம். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பது பெருமையாக இருக்கிறது. 'குட் லக் ஜெர்ரி' ட்ரைலர் நன்றாக இருந்தது. உங்களை தவிர வேறு யாராலும் ஜெர்ரி கதாபாத்திரத்தில் யாராலும் சிறப்பாக நடிக்க முடியாது என்று நயன்தாரா பதிலளித்ததாக கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான் இந்தியா படம் - சூர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jhanvi kapoor to play opposite for suriya in karna movie

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இப்படம் பான் இந்திய படமாக இரண்டு பாகங்களில் உருவாவதாகவும் மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

“ஜெய் ஸ்ரீராம்...” - வருத்தம் தெரிவித்த நயன்தாரா  

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Nayanthara expresses regret over Annapoorani film issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி படம் வெளியான நிலையில், இப்படத்தில் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு, இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.