நடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தை டார்க் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்த படம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவன படத்தில் தனது உண்டர் பார் படத் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதி பெறாமல் சந்திரமுகி படக் காட்சிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அந்த படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏ.பி. இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சி நீக்கவேண்டும். 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட படத்தின் காட்சிகள் இதுவரையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
அதே சமயம் ஆவணப்படத்தில் சந்திரமுகி படக் காட்சியைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும். ஆவணப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். ஆவணப்படத்தின் மூலமாக ஈட்டிய லாபக் கணக்கை தங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை இன்று (07.07.2025) விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, “இந்த மனு தொடர்பாக டார்க் ஸ்டுடியோ நிறுவனமும், நெட் பிளிக்ஸ் நிறுவனமும் 2 வாரங்களில் பதிலளிக்கவேண்டும்” என்று உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.