நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான படம் ‘அன்னபூரணி’. ‘ஜீ ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மற்றும் ‘டிரடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் நயன்தாராவின் 75வது படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான அதே மாதமே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக சிகிச்சை எழுந்தது. மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், “படத்தில் இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்வதாகவும் பின்பு லவ் ஜிகாத் கலாச்சாரத்தை சில காட்சிகள் ஊக்குவிப்பதாகவும் ஃபர்ஹான் கதாபாத்திரம்(ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படம் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு நயன்தாரா சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இப்படம் தற்போது மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த முறை ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை(01.10.2025) முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. ஆனால் டப் செய்யப்பட்ட இந்தி மொழியில் மட்டும் வெளியாகிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.