தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துப்பிரபலமானார். கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம், 1,000 கோடிக்கு வசூல் சாதனை படைத்திருந்தது.
இவர் தற்போது, மலையாளத்தில் நிவின் பாலியோடு ‘டியர் ஸ்டண்ட்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், மூக்குத்தி அம்மன் 2, கவினோடு பெயரிடாத படம், மம்மூட்டி படம் உள்ளிட்ட பல படங்கள் நயன்தாரா தன் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
லட்சுமி என்ற குறும்படம் மூலம் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குநர் சர்ஜூன், ஏற்கெனவே நயன்தாராவை வைத்து ஐரா என்ற படத்தை இயக்கியிருந்தார். இவர் தற்போது நயன்தாராவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விமர்சகரும் எழுத்தாளருமான பரத்வாஜ் ரங்கன் கதை எழுதுகிறார் என்று கூறப்படுகிறது.