தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் 'உன்னைப்போல் ஒருவன்'. இந்தப் படமானது நசீருதின்ஷா நடிப்பில் 'அ வெட்னஸ்டே' என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நசீருதின்ஷா நடித்த அந்தப் படத்தை நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். இந்தப் படம் ஆங்கிலத்திலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் நசிருதிஷா கடந்த 1968-ம் ஆண்டிலிருந்து திரைத்துறையில் நடித்து வருகிறார். மூன்று தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில், ''நான் செய்யவேண்டிய கடமை இன்னும் இருப்பதாகாவே உணர்கிறேன். ஒரு நடிகனாக நான் இன்னும் முழுமை பெறவில்லை. பார்வையாளர்களுக்குக் கொடுக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. என்னை இன்னும் மக்கள் திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதே நான் செய்த பாக்கியம். நான் என்னுடைய பணியை விரும்புகிறேன். நடிப்பை விரும்புகிறேன்.
நடிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியவில்லை. எனக்கு நடிப்புவெறி பிடித்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஒருவேளை நாளை காலை எழும்போது என்னால் நடிக்க முடியவில்லை என்றால் அநேகமாகத் தற்கொலை செய்துகொள்வேன் என்று நினைக்கிறேன். அது இல்லாமல் வாழ்க்கையில் வேறு என்ன இருக்கிறது?
புதிய இயக்குனர்களோடு பேசும்போது அவர்களுக்கு உதாரணமாக ஹபீப் தன்வீர், கிரீஷ் கர்னாட், ஓம் புரி, ஷ்யாம் பெனகல், சத்யதேவ் டூபே உள்ளிட்ட இயக்குனர்களைப் பற்றி சொல்வேன். நான் இளையவனாக இருக்கும்போது எனக்கு முன்மாதிரிகளாக இருந்தவர்கள் அவர்கள்தான். ஒருவர் கஷ்டப்படும் நேரத்தில் அவருக்குத் தேவை ஊக்கம் மட்டுமே. அவர்கள் எப்போதும் எங்களுக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர்.
எங்களுடைய துயரமான காலங்களில் கூட நாங்கள் நம்பிக்கையுடன் போராடி நடிகர்களாக ஆவதற்கு அவர்கள்தான் காரணம். எனவே நான் புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு பணியாற்றும்போது அவர்களுக்கு இந்தக் கதைகளைச் சொல்லி ஊக்கப்படுத்த முயல்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.