Skip to main content

உண்மை சம்பவ பின்னணியில் ‘நரிவேட்டை’ - உலா வந்த தகவலை தெளிவுபடுத்திய படக்குழுவினர்

Published on 31/05/2025 | Edited on 31/05/2025
narivetta team clarifies rumours that some scenes are deleted and re censored

டொவினோ தாமஸ் நடிப்பில் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘நரிவேட்டா’. தமிழில் ‘நரிவேட்டை’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இப்படத்தில் சேரன், சுராஜ் வெஞ்சரமூடு, பிரியம்வதா கிருஷ்ணன் உ ள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சேரன் கிரே ஷேடில் நடித்திருக்கும் சேரன், இப்படம் மூலம் மலையாள படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். இந்தியன் சினிமா கம்பெனி என்ற பெயர் கொண்ட தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

இப்படம் உண்மை சம்பவ பின்னணியில் எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதாவது 2003 ஆம் ஆண்டு வயநாடு மாவட்டம் முத்தங்காவில், பழங்குடியினர் நடத்திய நில உரிமை போராட்டத்தையும் அவர்களுக்கு எதிராக அன்றைய கேரள அரசு நடத்திய வன்முறையையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இப்படம் மறுதணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் சில காட்சிகளை நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இதனை தற்போது படக்குழுவினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனமான இந்தியன் சினிமா கம்பெனி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “சமீபத்தில், நரிவேட்டா மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சில தொடர்புடைய காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தன. படத்தில் எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவாகக் கூற விரும்புகிறோம். அதே போல் எந்த காட்சியும் மாற்றப்படவில்லை. பிரபல ராப்பர் வேடன் பாடிய ‘வாடா வேடா’ பாடலைச் சேர்த்ததற்காக மட்டுமே மறு தணிக்கை செய்யப்பட்டது.

அதைத் தவிர, படம் வெளியீட்டு நாளில் எந்த காட்சிகளுடன் வெளியானதோ அதே காட்சிகளுடன் தான் திரையிடப்பட்டு வருகிறது. எந்த மாற்றங்களும் செய்யாமல் ஆரம்பம் முதல் முடிவு வரை நீங்கள் நரிவேட்டாவை திரையரங்குகளில் பார்க்கலாம். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பாதகமான வானிலை சூழ்நிலைகளிலும் கூட, நரிவேட்டாவைப் பார்க்க திரையரங்குகளுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்