Skip to main content

நலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...  

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர். 

 

kk

 

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதி வழங்கி உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு (நலிவுற்றகலைஞர்கள்) தமிழ்நாடு திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவிகேட்டு நடிகர் சங்கம் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதம்...

 

தேதி : 31.03.2020


அனுப்புநர்
M.நாசர், (முன்னாள் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட நடிகர்)
எண். 245, குகன் தெரு, காமகோடி நகர்,
வளசரவாக்கம், சென்னை – 87.

பெறுநர்
    மாண்புமிகு. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் அவர்கள்
    செய்தி மற்றும் விளம்பர துறை,
தலைமை செயலகம், சென்னை – 600 009

அன்புடையீர் வணக்கம்,

பொருள் : தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு (நலிவுற்றகலைஞர்கள்) தமிழ்நாடு திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவிடுமாறு கோருதல் – தொடர்பாக.
                         ----------
    தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது.  இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் மாவட்டங்களில் நடைபெற இருந்த நாடக விழாக்களும் நடைபெறாமல் போனதால் அதையே நம்பி இருக்கும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்படம் / நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தாங்கள் இதனை கருத்திற்கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இக்காலகட்டத்தில் தாங்கள் செய்யும் பேருதவி எங்களின் மனதில் நீங்காத இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள

(M.நாசர்)

நகல்:

1 உயர்திரு.அரசு முதன்மை செயலாளர் அவர்கள்
  செய்தி மற்றும் விளம்பர துறை,  தலைமை செயலகம், சென்னை – 600 009.
2. உயர்திரு. இயக்குநர் அவர்கள் செய்தி மற்றும் விளம்பர துறை
  தலைமை செயலகம், சென்னை – 600 009
3. திரு.தனி அலுவலர் அவர்கள்,
  தென்னிந்திய நடிகர் சங்கம்,
  G1,எண்.21, நந்தா அப்பார்ட்மெண்ட், ஹபிபுல்லா சாலை, தி.நகர் , சென்னை - 17. என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால்..?’ -விஷால் தரப்பு வாதம்!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
 

film actors association election issue


நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோரும் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். விசாரணையின் போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என்றும், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
 

film actors association election issue


இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும்  தெரிவிக்கப்பட்டது. மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தலையிடவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.


 

Next Story

நடிகர்சங்க சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நாசர், கார்த்தி வழக்கு! -தள்ளுபடி செய்ய அரசுத்தரப்பு பதில் மனு!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து அச்சங்கத்தின் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 

sandy

 

 

நடிகர் சங்க நிர்வாகப் பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம், பொருளாளர்  நடிகர் கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல்  செய்தார். 

அந்த மனுவில், ‘தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிப்படி, சங்கத்தின் பொதுச்செயலாளர் மட்டுமே வழக்கு தொடர முடியும். கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியே பதிவு காலம் முடிவடைந்த நிலையில், நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர்,  பொருளாராக இருந்த கார்த்தி ஆகியோர், சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க எந்தக் குழுவும் இல்லாததால் சிறப்பு அதிகாரி ஏன் நியமிக்க கூடாது என விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அவர்கள் அளித்த விளக்கத்தில் நடிகர் சங்க வழக்குகள் நிலுவையில் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது. இவ்வாறு நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் சங்கத் தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ, அல்லது ஓராண்டிற்கோ சிறப்பு அதிகாரியை நியமிப்பது என அரசு உத்தரவிட்டது. எனவே, நடிகர் கார்த்தி மற்றும் நாசர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கின் விசாரணையை நீதிபதி கல்யாண சுந்தரம் வரும் நவம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.