Skip to main content

 நா.முத்துக்குமார் 50வது பிறந்தநாள்; விழா எடுத்து சிறப்பிக்கும் திரையுலகம்

Published on 26/05/2025 | Edited on 26/05/2025
na muthukumar 50th birthday celebration

மறைந்த எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் ஜூலை 12ஆம் தேதி வருகிறது. இதனை சிறப்பிக்க திரையுலகினர் முடிவெடுத்துள்ளனர். அதனால் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 5ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திரையுலகினர் சார்பில் வெளியிடப்பட்ட அறிகையில், “தனது பாடல்களால் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளினில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும் ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும் அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது.

வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு, கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் விழாவை, நா.முத்துக்குமார் welfare core கமிட்டியோடு இணைந்து நமது ACTC நிறுவனம் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக நடத்த இருப்பதில் பெருமைக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களில் பெயர்களும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது” என்றார். 

சார்ந்த செய்திகள்