Skip to main content

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பேய் படமா? கிரைம் திரில்லரா? - 'டெவில்' விமர்சனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
devil tamil movie review

சவரக்கத்தி படத்திற்குப் பிறகு டைரக்டர் மிஷ்கினும் அவரது தம்பி ஆதித்யாவும் இணைந்து உள்ள மற்றொரு திரைப்படம் டெவில். பார்ப்பதற்கு பேய் படம் போல் ரிலீஸ் ஆகி இருக்கும் இத்திரைப்படம் உண்மையில் பேய் படமா? அல்லது வேறு ஒரு படமா?

விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு புறம் பூர்ணா தன் காதலன் உடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து இருவருக்குள்ளும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை டெவில் படத்தின் மீதி கதை.

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழு படத்தையும் சற்று விறுவிறுப்புடன் கூடிய காதல் கதையாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. முதல் பாதி முழுவதும் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் விதார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் படம் விரிந்து போக போக பூர்ணா விதார்த் இடையிலான பிரச்சனைகளை விரிவாக பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில் படம் முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைவாக இருப்பது படத்திற்கு அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு சிறிய கதையை முழு படமாக எடுக்கும் பட்சத்தில் அதில் திரைக்கதைக்கு பல்வேறு ஸ்கோப்புகள் இல்லாமல் ட்ரை ஆக இருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி படம் முழுவதும் நகர்கிறது. இதனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். இருந்தும் கதை சொன்ன விதத்திலும் திரைக்கதை அமைத்த விதத்திலும் ஆங்காங்கே திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் சுவாரசியத்தை கூட்டி இருப்பது படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறது.

devil tamil movie review

படத்தின் நாயகன் விதார்த் ஒரு யதார்த்த வக்கீலாக நடித்திருக்கிறார். சுபஸ்ரீ இடம் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகள் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவருக்கும் சுபஸ்ரீக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இன்னொரு நாயகன் திரிகுன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் பூர்ணாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பூர்ணாவுக்கு நல்ல நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கும் திரைப்படம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. பிரேமில் அழகாக தெரிகிறார், அழகாக நடிக்கிறார், அளவாக பேசி மனதை கொள்ளை அடிக்கிறார். இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சியில் கலங்கடித்து இருக்கிறார். 

மிஷ்கின் இசையில் பாடல்கள் மெலடி ரகம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் இன்டீரியர் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நம் மனதில் இருக்கும் நெகட்டிவான எண்ணங்களை ஒரு டெவில் போல் சித்தரித்து காட்டியிருக்கும் இத்திரைப்படம், அதை இன்னும் கூட விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம். 


டெவில் - பேய் படம் இல்லை!

Next Story

“பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்” - மிஷ்கின்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
mysskin about poorna

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்தப் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் பிப்ரவரி 2ஆம் தெதி வெளியாகிறது. இதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.

ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்த பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன்.. இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான் தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் ஏதும் செய்துவிட முடியாது.  சாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்… இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே… அது எல்லாராலும் முடியாது. ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்,  சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்.  நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் இருக்கும். 

நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர் நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்…. அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள். இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையைக் கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு  35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்” என்றார்.