
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது.
இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ஜூலை 4ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கின், மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டர். நிகழ்வில் மிஷ்கின் பேசுகையில், “என்னை நிறைய சினிமா நிகழ்வுக்கு கூப்பிடுறாங்க. தயவு செய்து என்னை கூப்பிடாதிங்க. அப்படி கூப்பிட்டால் ரூ.5 லட்சம் கொடுங்க. குடும்ப செலவுகளுக்கு ஆகும். எனக்கு நிறைய வேலை இருக்கு. நிறைய கதைகள் பண்ணிகிட்டு இருக்கேன். அதனால் நிறைய படிக்க வேண்டும்.
சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். 'பறந்து போ' படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம்”என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நிறைய பேர் நான் மேடையில் பேசினால் தண்ணி போட்டு பேசுவதாக சொல்கின்றனர். ஆனால் அது அப்படியில்லை. நான் நைட்டு தான் போடுவேன். மேடைக்காக போடமாட்டேன்” என்றார்.