Skip to main content

”நான் விழுந்து விழுந்து அழுதிருக்க வேண்டும். ஆனால்...” - விஜய் சேதுபதி படம் குறித்து மிஷ்கின் உருக்கம்

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

Mysskin

 

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், கடைசி விவசாயி படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குநர் மிஷ்கின், படத்தையும் இயக்குநர் மணிகண்டனையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

 

படம் முடிந்த கையோடு வெளியே வந்த இயக்குநர் மிஷ்கின், காரில் சென்றவாறே படம் குறித்து பேசியுள்ள காணொளியில், "கடைசி விவசாயி படம் பார்த்தேன். படத்தின் இடைவேளையில் நான் விழுந்து விழுந்து அழுதிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில கண்ணீர் துளிகளோடு அமைதியாக அமர்ந்திருந்தேன். என்னுடைய மகளை இந்தப் படம் பார்க்கச் சொல்வேன். படம் கொஞ்சம் மெதுவாக போகிறது என்று திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது சிலர் சொன்னார்கள். அவசர கதியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை மெதுவாக வாழவேண்டும் என்று இந்தப் படம் சொல்கிறது. சொந்தமாக 20 சென்ட் நிலம்கூட இல்லாத குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் தந்தை விவசாயியாக இல்லையே என்று நினைத்து இன்று வருந்துகிறேன். 

 

இந்தப் படம் மிகவும் எளிமையான வலிமையான படம். சமூகத்திற்கு பயன்படக்கூடிய படமாகவும் நம்முடைய ஆன்மாவை சுத்தப்படுத்தக்கூடிய படமாகவும் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்று கடைசி விவசாயி. குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தை பார்க்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்த முதியவர், இன்றும் நடித்துக்கொண்டிருக்கிற ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் மாதிரிதான் எனக்கு தெரிந்தார். இந்தப் படத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் 20 ஆஸ்கர் விருது கொடுத்திருப்பார்கள். படத்தை பார்த்தவுடன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காரிலியே விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறேன். இந்தப் படத்தை நாம் பாராட்டவில்லை என்றால் நமக்குள் எந்தவிதமான ஆத்மீக உணர்வும் இல்லை என்று அர்த்தம். 

 

படத்தின் ஒவ்வொரு ஷாட்டையும் இயக்குநர் அழகாக வடிவமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும், ஆன்மாவையும் கொடுத்த தம்பி விஜய் சேதுபதிக்கு என்னுடைய பாராட்டுகள்.  இந்தப் படத்தை பார்த்துவிட்டு எங்கள் பொறுமையை சோதிக்கிறது என்று ஒருவர் கூறினால் அவர் தன்னுடைய தாய், தந்தையை உற்றுப்பார்க்காதவர், யானையையும் நாய் குட்டியையும் உற்றுப்பார்க்காதவர். இயக்குநர் ஷங்கருக்கு நான் ஒரு விழா எடுத்தேன். மணிரத்னம், பாரதிராஜாவுக்கும் விழா எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், உனக்குத்தான் மணிகண்டன் நான் விழா எடுக்க வேண்டும். என்னுடைய அடுத்த விழாவின் கதாநாயகன் நீதான். அதற்கு முன்பு அனைத்து இயக்குநர்களும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய பேட்டி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியுடன் மோத ஜெயராமை தேர்வு செய்த மிஷ்கின்?

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

jayaram to play villain in vijay sethupathi, mysskin movie

 

விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் கமிட்டாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதன் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.  

 

இப்படத்தை எஸ். தாணு தயாரிப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இப்படத்தின் வில்லனை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயராம் தற்போது விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் மோதவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

ஏற்கனவே ஆண்ட்ரியா நடிப்பில் மிஸ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மிஷ்கினின் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Vijay fans are angry with Mysskin speech about leo update

 

இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது மேடையில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் டைனோசர்ஸ் பட இசை வெளியீட்டு விழாவில், "10 மணி ஆச்சு... எல்லாரும் போய் தண்ணி அடிங்க., சிகரெட் அடிங்க, தூங்குங்க" என மேடையில் பேசியது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் விஜய் குறித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவர் பேசுகையில், "லியோ பட இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடக்குது. படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். நிச்சயம் படம் வெற்றியடையும்" என்றார். 

 

இதில் விஜய்யை அவன் இவன் என்று சொல்லியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மிஷ்கினை கிண்டல் செய்தும் பொது இடத்தில் மரியாதையாக பேச வேண்டியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் சிறிய வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.