Skip to main content

“எல்லா காலத்திலும் இருக்கும் அரசியலைப் பேச வேண்டும்” - மிஷ்கின் 

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
mysskin about ramar temple openeing and his politivs view

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்தப் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் பிப்ரவரி 2ஆம் தெதி வெளியாகிறது. இதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த மிஷ்கின், தற்போது விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கி வரும் டிரெயின் படம் குறித்து பேசுகையில், “25 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். விஜய் சேதுபதி மாதிரி ஒரு சிறந்த நடிகனை நான் பார்த்ததில்லை. அவ்ளோ அர்ப்பணிப்பு, நேர்மை. அது ஒவ்வொரு நாளும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. தாணு சார் ஒரு குழந்தையை எப்படி ஒரு அப்பா பார்ப்பாரோ அப்படி தான் பார்த்து கொள்கிறார். படம் அவ்ளோ அழகாக இருக்கிறது. நிறைய பேர் நடிக்கிறாங்க. நான் எழுதியதிலே ரொம்ப வேகமாக இருக்கும் படம் டிரெயின். அஞ்சாதே படத்தை விட வேகமாக இருக்கும் என நினைக்கிறேன். காத்திருங்கள். நிச்சயமா இப்படம் உங்களை சந்தோஷப் படுத்தும்” என்றார். 

ராமர் கோயில் திறப்பு குறித்த கேள்விக்கு, “ராமர், அல்லா, ஏசு, பௌத்தர், குருநானக் எல்லாருமே என் மனசுக்குள்ள இருக்காங்க. கோவிலுக்கும் சென்று கும்பிடலாம். ராமபிரான் ஒரு பெரிய அவதாரம். காவியத் தலைவன். அதில் நிறைய கருத்துகள் சொல்வாங்க. எனக்கு ரொம்ப அரசியல் கதையெல்லாம் தெரியாது. அது சம்மந்தமாக கருத்தும் சொல்லத் தெரியாது. ஆனால் எல்லாமே அழகு. எதிர்ப்பும் இருக்கட்டும். அதில் தப்பில்லை. ஒரு சினிமாக்காரனாக அரசியல் சார்ந்த கருத்துகளை சொல்லக் கூடாது என முடிவு பண்ணியிருக்கேன். ஆனால் சினிமாவை சார்ந்தவர்கள் அரசியல் கருத்து சொல்கிறார்கள். அது அவர்களுடைய கருத்து சுதந்திரம். 

என் அரசியல் நான் எடுக்கும் சினிமா தான் என நினைக்கிறேன். என் சினிமாவில் என் கதாபாத்திரங்கள், எல்லா காலத்திலும் இருக்கும் அரசியலை பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன். மனித அவலம், பிற மனிதனை அவன் ஏன் நேசிக்கத் தவறுகிறான், ஒரு குடும்பத் தலைவனாக எப்படி வாழ வேண்டும், மற்றவர்களிடம் எப்படி அன்பைச் செலுத்த வேண்டும். இதைத் தான் என்னுடைய அரசியலாகப் பார்க்கிறேன். சமகால அரசியலைப் பற்றி நான் பேசக்கூடாதென நினைக்கிறேன். ஏனென்றால், அவரவர்களுக்கென்று ஒரு வேலை இருக்கிறது. என்னுடைய கடமை, நான் அரசியலை பற்றிப் பேசக்கூடிய இடம் ஓட்டு மட்டும் தான்” என பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.

Next Story

'ராமர் கோவில் கட்ட அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது'-கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.

அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.