
கிரிக்கெட் வீரர்களுக்கான பயோபிக்களில் தோனி, சச்சின், அசாருதின், கபில் தேவ் என்று பயோபிக்கள் நீண்டுகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்ச்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே மஹிந்த ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சே முத்தையா முரளிதரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து முத்தையா முரளிதரன் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், “திரைக்கதை ரெடியானவுடன், நாங்கள் இதற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்கதான் யோசித்தோம். அவர் ஒரு திறமையான நடிகர் என்று நான் நினைக்கிறேன். அவர் முழுமையான நடிகர் என்று நம்புகிறேன். மேலும், அவர் கண்டிப்பாக படத்திற்கான அதிசயத்தை நிகழ்த்துவார்” என்றார்.
முதன்மையாக தமிழில் உருவாகும் இப்படம், தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹிந்தி மற்றும் சிங்கள மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.