Skip to main content

"என்னடா தெரியும் உனக்கு..." - 'தேசிய தலைவர்' இசை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற களேபரம்!

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

muthuramalingam thevar biography desiya thalaivar audio launch ssr kannan fight

 

முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர். கண்ணன், ஃபார்வர்டு (Forward) பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 

எஸ்.எஸ்.ஆர். கண்ணன் பேசுகையில், "இப்படத்தில் என்னுடைய தந்தையார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வரக்கூடிய 6 காட்சிகள் இருக்கின்றன. அதில் நானே விக் அணிந்து நடித்திருக்கிறேன். தேவர், மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, பெண் நர்ஸ் வேண்டாம், ஆண் நர்ஸ் தான் வேண்டும் என்றார். அதை என் தந்தை தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். தேவருடன் நெருங்கி பழகியவர்களில் என் தந்தையாரும் ஒருவர்” எனப் பேசினார். 

 

இதனை தொடர்ந்து பேசிய நவமணி, "பெண் நர்ஸ் வேண்டாம், டாக்டர்கள் வேண்டாம் என எஸ்.எஸ்.ஆரை கூப்பிட்டு தேவர் சொன்னதாக கூறுவது, எஸ்.எஸ்.ஆருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் என் தேவரை அது சிறுமைப் படுத்தும் வார்த்தை. அப்படி ஒரு நிகழ்வே கிடையாது. இதனால் கோபமடைந்த எஸ்.எஸ்.ஆர். கண்ணன், "எங்க அப்பா சொல்வது பொய் என்று சொல்றியா...என்னடா தெரியும் உனக்கு, தேவருடன் பழகி இருக்கியா நீ" என நவமணியை தாக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர். இதனால், மேடையில் சிறிது பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அன்பில் மகேஷ் மரியாதை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Anbil Mahesh respects the statue of Muthuramalinga Thevar

 

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு‌.மதிவாணன் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜ், செங்குட்டுவன்,  மூக்கன்,  லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், ராஜ் முகமது, மணிவேல்,  சிவாகுமார் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

 

Next Story

"தேவரின் தேசிய சிந்தனைகளை பாடமாக கற்றுத்தர வேண்டும்" - வைரமுத்து விருப்பம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vairamuthu about muthuramalinga thevar

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா இன்று (30.10.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேவர் திருமகன் என்பது ஒரு இனப்பெயர் அல்ல. தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. அருள்கூர்ந்து தமிழ் சமூகம் தேவர் பெருமகனை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து விட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது என் குரல் அல்ல. தேவர் பெருமகன் சொன்ன சொல். 

 

தேவர் திருமகன் சொன்னார், எனது ஆறு மாதத்தில் தாயை இழந்தேன்; எனக்குப் பாலூட்டியவர் ஒரு முஸ்லிம் தாய், கல்வி கொடுத்தோர் கிறித்துவப் பாதிரிமார்கள் என் பெற்றோர் இந்துக்கள், இதில் எங்கே இருக்கிறது சாதி? என கேட்டார். அவரை சாதி என்ற வட்டத்தை விட்டுவிட்டு தேசியம் என்ற பெரும் சிந்தனைக்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சொன்னார், 2 லட்சம் ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றேன். இதில் என் சமுதாய ஓட்டுகள் வெறும் 18 ஆயிரம் தான். மீதமுள்ள ஓட்டுகள் எல்லாம் அத்தனை சமூகவத்தரும் இட்டு வெற்றிபெற செய்தார்கள் என்றார். அந்த வட்டத்தை விட்டு அவரை வெளியே கொண்டு வந்து அவரது தேசிய சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை, அவரது தியாகத்தை, ஒரு பெரிய பாடமாக இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 

இன்னொன்று, தேவர் என்று சொன்னால், அது சாதிய அடையாளம் என்று ஒரு குறிப்பிட்ட வட்டம் என்பது இல்லை. உ.வே சாமிநாத ஐயர் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, வ.உ சிதம்பரம் பிள்ளை என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, லட்சுமண சாமி முதலியார் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, இவையெல்லாம் அவர்களின் குடி அடையாளம். என் தந்தை வரைக்கும் தேவர் என்ற பட்டத்தை வைத்து கொண்டது அவர்களின் அடையாளம். நான் வைத்துக்கொள்ள போவதில்லை என்பது எனது சமூகசீர்திருத்தம், எனது உள்ளம். எனவே பழைய பெயர்களை அழித்து விட வேண்டாம். புதிதாக யாரும் சாதி பெயர்களை வைத்து கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோளாக இருக்கிறது. அம்பேத்கரை எல்லா சமூகமும் கொண்டாட வேண்டும் என்பதை போல தேவரையும் அனைத்து சமூகமும் கொண்டாட வேண்டும்" என்றார்.