
'பாட்டுக் கதை' தொடரின் வழியாக பாடலாசிரியர் முத்தமிழ் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்
படத்திற்கும், காட்சியின் சூழலுக்கும் என்ன தேவையோ அதற்கு ஏற்ற வகையில் தான் நாம் பாடல் எழுத முடியும். வேற்றுமொழிப் படங்களுக்கு எழுதும்போது, பாடல்களை நம்முடைய சூழலுக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் மாற்றி எழுத வேண்டும். இசைக்கு மீறாமல் பாடல் இருக்க வேண்டும். சந்தத்துக்கு ஏற்ற வகையில் புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு எப்போதும் இருக்கும். 'மைனர் வேட்டி கட்டி' என்கிற பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மறக்க முடியாத ஒன்று.
கேரளாவைச் சேர்ந்த ஒரு குழந்தை கூட இந்தப் பாடலைப் பாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'லால் சிங் சத்தா' படத்துக்கு நான் எழுதிய பாடல்களை அமீர்கான் சார் பாராட்டினார். மிகவும் பெருமையாக இருந்தது. 'முண்டாசுப்பட்டி' படத்தில் அனைத்து பாடல்களையும் நான் எழுதினேன். அந்தப் படமும் நல்ல வெற்றி அடைந்தது. அப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் பாடல்கள் எழுதியது பெருமையான விஷயம். 'டூரிங் டாக்கீஸ்' என்கிற படத்தில் இளையராஜா சாருடைய இசையில் நான் எழுதிய பாடல் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது.
இளையராஜா சார் என்னைப் பாராட்டிய தருணம் நான் பல விருதுகளை வாங்கியதற்கு சமமானது. எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அது. அவரை அதற்கு முன் தூரத்தில் இருந்து தான் பார்த்திருக்கிறேன். அவரோடு நான் பணியாற்றியது ஆச்சரியமான விஷயம். அந்தப் படத்தில் இளையராஜா சாரை மையப்படுத்தி நான் எழுதிய வரிகள் அனைவரையும் கவர்ந்தது. அந்த வரிகளுக்கு அவரும் ஒப்புதல் கொடுத்தார். இன்று பாடலாசிரியர்களுக்கான இடம் குறைவாகவே இருக்கிறது. அதற்கான போட்டியும் நிறைய இருக்கிறது.