இசையமைப்பாளர் இமான், பல திறமையான இசைக்கலைஞர்களைத் தனது படங்களின் மூலம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் கண் பார்வையற்ற திருமூர்த்தியை தொடர்ந்து வைக்கம் விஜயலட்சுமி, மகிழினி தமிழ்மாறன், ஹரிஹரசுதன், செந்தில் கணேஷ் உள்ளிட்டோரை அறிமுகம் செய்திருந்தார். சமீபத்தில் கூட ஸ்வஸ்திகா சாமிநாதன் என்ற இளம் பாடகியை தான் இசையமைத்து வரும் 'பப்ளிக்' படத்தில் பாட வாய்ப்பளித்தார்.
இந்நிலையில் ரயிலில் ஒரு ஏழை பெண்மணி 'கண்ணோடு காண்பதெல்லாம்' பாடலை மிக அழகாக பாடும் வீடியோ சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இமான் அந்த பெண்மணிக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக இமான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சமீபத்தில் ரயிலில் பாடும் பெண்மணியின் வீடியோ வைரலாகிறது. அந்த பெண்மணியின் தொலைப்பேசி எண் அல்லது எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்ற விவரத்தைப் பகிரவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல திறமையான இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்யும் இமான் இந்த பெண்மணியையும் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இமானின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.