‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘பொட்டு’, ‘சார்லி சாப்ளின் 2’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் அம்ரிஷ். பிரபல பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனான இவர், சென்னை வளசரவாக்கம், ஜானகி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறனிடம், இரிடியம் கலந்த கோயில் கலசம் தன்னிடம் இருப்பதாகவும், அதை அலுவலகத்தில் வைத்து பூஜை செய்தால் தொழில் வளர்ச்சி அடையும் என்றும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். அதை நம்பிய நெடுமாறன், அந்தக் கலசத்தை ரூ. 26 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து சோதனை செய்தபோது அது போலியானது எனத் தெரியவந்துள்ளது. நெடுமாறன் இதுகுறித்து அம்ரிஷிடம் கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்ட அம்ரிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நெடுமாறன் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து, சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து அம்ரிஷிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்ரிஷ் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தமத்திய குற்றப்பிரிவு போலீசார், அம்ரிஷை அதிரடியாகக் கைது செய்தனர்.