Skip to main content

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்; மர்ம நபர் கண்டுபிடிப்பு - போலீசார் ஷாக்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

mumbai police discovered a man who threat salman khan

 

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தற்போது 'டைகர் 3', 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ வருகிற 21ஆம் தேதி (21.04.2023) வெளியாகவுள்ளது. இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்காகும்.

 

படங்களில் பிசியாக நடித்து வரும் சல்மான் கான், அவ்வப்போது கொலை மிரட்டலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த வருடம் ஜூன் மாதம் பஞ்சாபி பாப் பாடகரான சித்து மூஸ் கொலை போல் கொடூரமாகக் கொல்லப்படுவீர்கள் என கடிதம் மூலம் மிரட்டல் வந்தது. கடந்த மாதம் இ-மெயில் மூலமாக கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து மும்பை போலீசார் சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதற்கு பின்னால் பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கருதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் நேற்று தொலைபேசி மூலமாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. நேற்று (10.04.2023) இரவு 9 மணிக்கு மும்பை காவல் நிலையத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமிற்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அந்த அழைப்பில், ராக்கி பாய் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு நபர் பேசியுள்ளார். மேலும், ஜோத்பூர் பகுதியில் இருந்து பேசுவதாகவும் வருகிற 30ஆம் தேதி அன்று சல்மான் கானை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்தது மும்பையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள தானே (Thane) மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் என்று தெரியவந்துள்ளது. சிறுவனை தற்போது விசாரித்து வருகின்றனர். இந்த மிரட்டலில் தீவிரத்தன்மை இல்லை எனவும், இருப்பினும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்