71வது தேசிய விருது வழங்கும் விழா கடந்த 23ஆம் தேதி வழக்கம் போல் டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைபெற்றது. இதில் 2023ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி விருது வழங்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது. நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார்.
தமிழ் சினிமாவில் இருந்து எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் சினிஷ் ஆகியோர் விருது பெற்றனர். நிகழ்வில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மோகன்லால் பெற்றுக் கொண்டார். இதில் முதல் முறையாக விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரை தொடங்கி வெள்ளித்திரை வரை ஏராளமான படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை மற்றும் வில்லனிசம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக தனது உடல்மொழி முதல் வசன உச்சரிப்பு வரை தனது நேர்த்தியான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இந்த நிலையில் தேசிய விருது வாங்கிய பிறகு தற்போது மறைந்த நடிகர்கள் சிவாஜி மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு மரியாதை செய்தார். அதாவது சிவாஜி வீட்டில் அவரது புகைப்படம் முன்பு விருது மற்றும் அதனுடன் வழங்கிய சான்றிதழை வைத்து மரியாதை செய்தார். அப்போது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உடனிருந்தார். இதையடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அதே விருது மற்றும் சான்றிதழை வைத்து மரியாதை செய்தார். பின்பு பிரேமலதா விஜயகாந்திடம் விருதை காண்பித்து மகிழ்ந்தார்.