
சென்னை ஜமாலியா மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 500 மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். இவர்களோடு நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் கலந்து கொண்டார்.
மாணவர்கள் முன்பு மேடையில் பேசிய எம்.எஸ்.பாஸ்கர், கலைஞர் குறித்தும் தனது பள்ளி காலம் குறித்தும் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “எனக்கு அரசியல் தெரியாது. என் அப்பாவை மட்டும் தான் தெரியும். கலைஞர் அப்பாவை என் அப்பா அண்ணன்னு கூப்பிடுவார். எல்லாரும் ஒரே மாவட்டம். கலைஞர் அப்பா என்னை பார்க்கும் போது நல்லா படி எனச்சொன்னார். அவர் அன்றைக்கு சொன்னதை நான் இன்று உங்களுக்கு சொல்கிறேன். நன்றாக படியுங்கள். படிப்பில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுங்கள். ஆனால் பொறாமை கொள்ள வேண்டாம். பெற்றோர்களுக்கு நான் சொல்வது, எப்ப பார்த்தாலும் பிள்ளைங்கள படி படின்னு கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்க வேண்டாம். படிப்பு என்பது முக்கியம் தான். ஆனால் பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதென்று பாருங்கள். அதில் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
நானெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யில் நான்கு முறை ஃபெயில் ஆனேன். என்ன காரணமென்றால் எதாவது ஒரு சப்ஜெக்டில் ஒரு மார்க் போயிடுச்சுன்னா எல்லாத்தையும் மறுபடியும் எழுத வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு சப்ஜெட்டில் ஃபெயில் என்றால் அதை மட்டும் திருப்பி எழுதிக்கொள்ளலாம். அதனால் கல்வி தற்போது ஈஸியாக கற்றுக் கொள்கிற நிலைமையில் இருக்கிறது. படிப்பதற்கான ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. அதனால் நல்லா படியுங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள். எதையும் மனப்பாடம் செய்ய வேண்டாம். புரிந்து படியுங்கள்.
என்னிடம் ஒரு டைரக்டர், எப்படி இவ்ளோ பெரிய டயலாக்குகளை மனப்பாடம் செய்கிறாய் என்று கேட்டார். நான் மனப்பாடமே பண்ணுவது கிடையாது. என்ன கான்செப்ட் என்பதை பார்த்துக் கொள்கிறேன். அதற்கு தகுந்த மாதிரி அதை விட்டு மீறிப்போகாமல் நானே இயல்பாக வசனங்களை பேசுகிறேன். எதில் நாம் முழு கவனத்துடன் இருக்கிறமோ அதில் நிச்சயம் சாதிக்க முடியும்” என்றார்.