Money Laundering Case Given by actor soori case high court new order

Advertisment

திரைப்பட காமெடி நடிகரான சூரி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும், தான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் ஆறு மாத காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல், சூரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் சூரி தரப்பில் அவரது உதவியாளரால்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி, சூரி கொடுத்தபுகாரின் அடிப்படையில் பதிவான வழக்கின் புலன் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.