மோகன் லால் மற்றும் ஷோபனா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள மலையாள படம் ‘துடரும்’. இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ரெஞ்சித் தயாரித்துள்ளார். மோகன்லாலின் 360வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படம் பெரிதளவு ப்ரொமோஷன் இல்லாமல் நேற்று(25.04.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் பெரும் ப்ரொமோஷன் செய்யப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் சர்ச்சையிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் துடரும் படத்திற்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் கிடைத்து வருகிறது. குறிப்பாக மோகன்லால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து மோகன்லால் தனது எக்ஸ் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துடரும் படத்திற்கு கிடைத்த அன்பால் மனம் நெகிழ்ந்து போயுள்ளேன். படம் குறித்த ஒவ்வொரு மெசேஜும் ஒவ்வொரு வாழ்த்தும் நான் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னை தொட்டுவிட்டது. இந்த படத்தின் கதையை மனம் திறந்து பார்த்ததற்கும் கதையின் ஆன்மாவை புரிந்துகொண்டதற்கும் மற்றும் கதையை கருணையோடு ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி.
இந்த நன்றியுணர்வு எனக்கு மட்டும் சொந்தமல்ல. படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சொந்தம். இந்தப் படம் அக்கறையுடனும் ஒரு நோக்கத்துடனும் அனைத்திற்கும் மேலாக, உண்மையுடனும் உருவாக்கப்பட்டது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு வெகுமதியை விட அதிகம். அதாவது ஒரு உண்மையான ஆசீர்வாதம் போன்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.