சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மேலும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மற்றும் மோகன்லால் சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் மோகன்லால் இணைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மோகன்லால், 'ஜெயிலர்' மட்டும் அல்லாது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ராஜஸ்தானில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.
மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது.
போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.