மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ௪௦ நாட்கள் கடந்து இந்நிகழ்சி ஒளிபரப்பாகி கொண்டு வரும் நிலையில் மொத்தம் 25 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் ஆதிலா மற்றும் நூரா என்ற தன்பாலின ஈர்பாளர்களும் கலந்து கொண்டுவிளையாடி வருகின்றனர். இவர்கள் குறித்து சக போட்டியாளரான லக்‌ஷ்மி என்பவர், இவர்களை யாரும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்கள், இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு இல்லை என பேசியிருந்தார். இது சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் பேசு பொருளாகவும் ஆனது. 

Advertisment

இதையடுத்து வார இறுதியில் இப்போட்டியை தொகுத்து வழங்கும் மோகன்லால் வழக்கம் போல் போட்டியாளர்களியிடம் அந்த வாரத்தில் நடந்த விஷயம் குறித்து பேசி வந்தார். அப்போது லக்‌ஷ்மியிடம் அவர் கூறிய கருத்து தொடர்பாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். அவரிடம் கோபமாக பேசிய மோகன்லால், “உங்கள் வீட்டில் யார் வரவேற்கப்படமாட்டார்கள். சமூகத்தில் யாருக்கு மதிப்பில்லை” எனக் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த லக்‌ஷ்மி, தன்பாலின ஈர்பாளர்களை சாதாரணமாக்குவதில் தனக்கு உடன்பாடில்லை என்ற ரீதியில் பதிலளித்தார். 

இதையடுத்து கோபமடைந்த மோகன்லால், “அவர்கள் உங்கள் செலவில் வாழவில்லை. வேலை செய்து கொண்டு கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் குறித்து என்ன மாதிரியான கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள். சமூகம் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளது. உங்களுக்கு அவர்களிடம் பிரச்சனை இருந்திருந்தால் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கே வந்திருக்ககூடாது. உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களை போன்று நிறைய பேரை இந்த மேடைக்கு நாங்கள் பெருமையுடன் வரவேற்றுள்ளோம்” என்றவர் இன்னும் ஒரு படி மேலே போய், “அவர்களை நான் என் வீட்டிற்கு வரவேற்பேன். அவர்கள் என் வீட்டிற்கு வரட்டும்” என்றார். இவரது பேச்சு பலரது பாராட்டை பெற்றுள்ளது.