mohan raja

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மோகன் ராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், 'வேலைக்காரன்'. 2017-ஆம்ஆண்டு வெளியான இப்படத்திற்குப் பிறகு மோகன் ராஜா எந்தப் படத்தினையும் இயக்கவில்லை. அவர், அவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கும் முயற்சியில் உள்ளதாகக் கூறப்பட்டது. அப்படத்தின் நாயகனான ஜெயம் ரவியும் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இப்படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisment

அதன்பின் அவர், நடிகை பிரசாந்தை வைத்து அவரது தந்தை தயாரிக்க உள்ள ஒரு படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. கதை தொடர்பான விவகாரத்தில் நிலவிய மாறுபட்ட கருத்து காரணமாக,அப்படத்தில் இருந்து மோகன் ராஜா வெளியேறினார். இதனையடுத்து, மோகன் ராஜா இயக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரிய கேள்வி எழுந்தது.

Advertisment

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா படம் இயக்க இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தகவலை, இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதத்துடன், வாழ்க்கை எப்போதும் எனக்குச் சிறந்த மற்றும் பெரிய விஷயங்களையே பரிசளித்துள்ளது. இந்த நேரத்தில் மெகா ஸ்டருடன் இணைந்து ஒரு மெகா படத்தை இயக்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படமானது 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் என இணைத் தயாரிப்பு நிறுவனமான கொனிடெலா புரோ தெரிவித்துள்ளது.